கோவை பள்ளி மாணவி விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு

மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
கோவை பள்ளி மாணவி விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

கோவை,

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்படும் சித்பவானந்தா மெட்ரிக் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 7-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவரை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், பள்ளியின் முதல்வர் ஆனந்தியை தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த சூழலில் வகுப்பறைக்கு வெளியே மாணவி அமர வைக்கப்பட விவகாரம் தொடர்பாக, மாணவியின் தந்தை சுரேந்திரநாத் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன்படி பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகிய 3 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பூப்பெய்திய மாணவிவை வெளியே உட்கார வைத்த விவகாரம் தொடர்பாக பள்ளியில், மாவட்ட பள்ளிக் கல்வி உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் போலீசார்ர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங், "கோவை தனியார் பள்ளியில் மாணவிக்கு தீண்டாமை நடைபெறவில்லை. தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி தனியே அமர வைக்க மாணவியின் தாய் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவரை தனியாக அமர வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார். 

ஆனால் தனியாக அமர வைக்க கூறினேனே தவிர, வெளியே தரையில் அமர வைக்க கூறவில்லை என்று மாணவியின் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com