‘பீகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சிக்கு வந்தால் மக்கள் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள்’ - பிரதமர் மோடி

சாத் பூஜையை நாடகம் என்று சொன்ன காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டாமா? என்று மோடி கேள்வி எழுப்பினார்.
‘பீகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சிக்கு வந்தால் மக்கள் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள்’ - பிரதமர் மோடி
Published on

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளை, 2-ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் பிகாரின் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்.ஜே.டி.) கட்சியினர் தங்கள் பிரசாரத்தில், குழந்தைகள் வளர்ந்ததும் 'ரங்க்தார்' (தெருவில் ரகளை செய்பவர்கள்) ஆக வேண்டும் என்று சொல்ல வைப்பதைக் கேள்விப்பட்டேன். இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பீகார் நிச்சயமாக 'கட்டா'(நாட்டுத் துப்பாக்கி), 'குஷாசன்' (தவறான நிர்வாகம்), 'குரூர்தா' (கொடுமை) மற்றும் ஊழல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை விரும்பவில்லை.

நான் எங்கு சென்றாலும், மக்களிடம் நாட்டுத் துப்பாக்கி அரசாங்கம் வேண்டாம், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வேண்டும் என்ற மனநிலையே மேலோங்கி நிற்கிறது. ஏனென்றால், ஆர்.ஜே.டி. ஆட்சிக்கு வந்தால் மக்களின் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து, கைகளை உயர்த்தச் சொல்லி மிரட்டுவார்கள். அதை மக்கள் விரும்பவில்லை.

மாறாக மக்கள் புதிய தொழில் தொடங்க விரும்புகிறார்கள். இதை தேசிய ஜனநாயக கூட்டணி எளிதாக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி துப்பாக்கியை நிராகரித்து, பள்ளிப் பைகள், கணினிகள், கிரிக்கெட் மட்டை மற்றும் ஹாக்கி மட்டைகளை ஏந்துவதை ஊக்குவிக்கிறது.

சாத் பூஜையை நாடகம் என்று காங்கிரஸ் கட்சியினர் சொல்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் மக்கள் மகா கும்பமேளாவையும், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலையும் அவமதித்துள்ளனர். இது நமது உணர்வுகளுக்கு அவமானம் இல்லையா? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? ஒரு ஜனநாயகத்தில், தண்டிக்க சிறந்த வழி உங்கள் வாக்குரிமைதான்.

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com