ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை தமிழகப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் - டி.டி.வி. தினகரன்

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் இல்லாத அளவிற்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கும் சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது.

பெண்களின் உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் உரிய மதிப்பளிக்காமல் அவர்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் குரூர மனம் படைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைவில் தண்டனை நிச்சயம் என்பதை இவ்வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை, தமிழகப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் அன்றாடம் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வகையில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com