‘இந்தியா உடனான எரிசக்தி வர்த்தகம் தொடரும்’ - ரஷியா நம்பிக்கை

ரஷியாவின் நட்பு நாடுகளுக்கு யாரும் ஆணைகளை பிறப்பிக்க முடியாது என ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
‘இந்தியா உடனான எரிசக்தி வர்த்தகம் தொடரும்’ - ரஷியா நம்பிக்கை
Published on

மாஸ்கோ,

ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனை காரணமாக காட்டி, இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளும் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில், இந்தியா உடனான எரிசக்தி வர்த்தகம் தொடரும் என ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷியாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் கூறுகையில், எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பில் இருந்து வருகிறோம். ரஷியாவிடம் இருக்கும் எரிசக்தி வளத்திற்கு சந்தையில் தேவை இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட நமது கூட்டாளிகள் வர்த்தகத்தை தொடர்வார்கள் என்றும், எரிசக்தி ஒத்துழைப்பை வளர்ப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

ரஷியாவிடம் நட்புறவில் இருக்கும் நாடுகளுக்கு யாரும் ஆணைகளை பிறப்பிக்க முடியாது. அவர்கள் தங்கள் சொந்த பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா அதன் எரிசக்தி ஆதாரங்களை பரவலாக்கி, பன்முகப்படுத்துகிறது. இது இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் முற்றிலும் தேசிய நலன் சார்ந்து வழிநடத்தப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com