

வாஷிங்டன்,
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசின் செயல்திறன் துறை டி.ஓ.டி.ஜி.இ. (DODGE) தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். இந்த குழு அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்து வருகிறது.
இந்த குழு, இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது. இது குறித்து பேசிய டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ஏன் நிதி தர வேண்டும்? என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் மயாமி நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், யாரையோ வெற்றி பெற வைக்க பைடன் அரசு முயற்சித்துள்ளதாக கருத்து தெரிவித்தார். தொடர்ந்து இது குறித்து அவர் கூறியதாவது;-
"இந்திய தேர்தல்களுக்காகவும், வங்காளதேசத்தில் அரசியல் சூழலை சீரமைப்பதற்காகவும் அமெரிக்க மக்களின் வரிப்பணம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஆசியா ஏற்கனவே நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாம் பணம் கொடுக்க தேவையில்லை.
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு ஏன் ரூ.182 கோடி வழங்க வேண்டும். அங்கு வேறு யாரையோ வெற்றி பெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது. இது குறித்து இந்திய அரசாங்கத்திடம் பேச வேண்டும்."
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.