காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்; 55 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்; 55 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
Published on

காசா சிட்டி,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 58 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, காசா முனையில் ஓராண்டுக்குமேல் மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே, மத்திய காசா பகுதியில் நிவாரண பொருட்களை வாங்க குவிந்தவர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளது. இந்த போரில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 920 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com