ரஷிய அதிபர் புதினை சந்தித்தார் பிரதமர் மோடி - அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை

ரஷியா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரஷிய அதிபர் புதினை சந்தித்தார் பிரதமர் மோடி - அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை
Published on

பீஜிங்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

நேபாள பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், மியான்மரின் மூத்த ராணுவ அதிகாரி மின் ஆங் லையிங், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் டோகாயேவ் உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இடையே ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடினர்.

சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

இந்த சூழலில், இன்று ரஷியா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது இந்தியா-சீனா-ரஷியா இடையேயான ஒத்துழைப்பு மற்றும் உறவு குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனவும், அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com