இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? ஈரான் வெளியிட்ட பதிவு

போர் பதற்றம் தொடர்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஈரான் ராணுவம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Image Courtesy : @IRIran_Military
Image Courtesy : @IRIran_Military
Published on

டெஹ்ரான்,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அதனால் யாருக்கு லாபம் ஏற்படும்? யாருக்கு நஷ்டம் ஏற்படும்? என 'எக்ஸ்' வலைதளத்தில் ஈரான் ராணுவம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பாகிஸ்தான்-இந்தியா போரால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்ன நடக்கும்?

வெற்றியாளர்கள்:

1- அமெரிக்கா

* இரு தரப்பினருக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வார்கள் (பாகிஸ்தானின் ஆயுதங்களில் 40% அமெரிக்காவில் இருந்து வருகிறது)

* பாகிஸ்தானை நிலைகுலைய செய்வதன் மூலம் சீனாவை பலவீனப்படுத்துவார்கள்.

2- இஸ்ரேல்

* இந்தியாவிற்கு டிரோன் விற்பனை செய்வார்கள் (Hermes 900)

* காசா போர்க்குற்றங்களை திசை திருப்புவார்கள்.

* ஏவுகணை கூட்டு உற்பத்தியில் லாபம் கிடைக்கும் (Barak-8)

* பாதுகாப்பிற்காக இந்தியாவின் ஐ.நா. வாக்குகளைப் பயன்படுத்தும்.

* ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை (Arrow-3) இந்தியாவிற்கு விற்பனை செய்யும்.

3- பயங்கரவாத குழுக்கள்

* ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் காஷ்மீரில் ஆட்சேர்ப்பு நடத்தும்.

4- ஆயுத தொழில் துறை

* லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் பிறர் ஆயுத ஒப்பந்தங்களில் இருந்து லாபம் பெறுவார்கள்

தோல்வியடைபவர்கள்:

1. பொதுமக்கள்:

* நிரந்தரமாக பாதிக்கப்படுவார்கள்

* உயிரிழப்பவர்களில் 75% பேர் போராளிகள் அல்லாதவர்களாக இருப்பார்கள்.

* விநியோக சங்கிலி சரிவால் 140 மில்லியன் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள்.

* 20 மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகள் ஆவார்கள்.

* காஷ்மீர் முகாம்கள் 4 மடங்காக நிரம்பி வழியும்.

2. தேசிய பொருளாதாரங்கள்:

* பாகிஸ்தான்: திவால்நிலைக்கு அருகில் செல்லும் (போருக்கு 77% வருவாய் செலவிடப்படும்)

* இந்தியா: 45% ரூபாய் சரிவு, $90 பில்லியன் தொழில்நுட்பத் துறை இழப்பு

3. சுற்றுச்சூழல் பேரழிவு

* யுரேனியம் விஷம் கலந்த நீர் (1999 போல்)

* காஷ்மீரின் 60% காடுகள் எரியும்

உண்மை நிலவரம்:

இந்தப் போரை ஆதரிக்கும் எந்த நாடும் அல்லது நடிகரும் இரு தரப்பினருக்கும் எதிரிதான். இந்தப் போர் மேற்கு நாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு மட்டுமே உதவும். இது ஆயுத வியாபாரிகளை வளப்படுத்தவும், தெற்காசியாவை அழிக்கவும் உருவாக்கப்பட்ட நெருக்கடி ஆகும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com