தினத்தந்தி
டார்ஜிலிங்: மேற்கு வங்காளத்தில் அமைந்திருக்கும் டார்ஜிலிங், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரபலமான கோடை வாசஸ்தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 8,586 மீட்டர் உயரம் கொண்ட கஞ்சன் ஜங்கா மலைச்சிகரம் கம்பீரமான தோற்றத்துடன் கவர்ந்திழுக்கும்.
திரும்பிய பக்கமெல்லாம் பச்சை பசேல் என படர்ந்திருக்கும் தேயிலை தோட்டங்கள் எழுப்பும் வாசம் திக்குமுக்காட செய்துவிடும். தேயிலை பானங்களை விரும்பாதவர்கள் கூட அதனை ருசித்து பார்ப்பதற்கு ஆர்வமாகிவிடுவார்கள்.
இயற்கையின் சொர்க்க பூமியாக விளங்கும் இங்கு சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. இயற்கை நேசர்களுக்கு பிரியமான இடமாக இது விளங்குகிறது.
அந்தமான் மற்றும் நிக்கோபார்; கோடையில் பெரும்பாலும் கடற்கரைகள் கவர்ச்சிகரமாக தெரியாது. மதிய வேளையில் அனல் காற்று வீசக்கூடும். ஆனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இந்த எண்ணம் நிச்சயமாக மாறிவிடும்.
சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தும் சாகச விளையாட்டுகள் அங்கு ஏராளம் இருக்கின்றன. மணற்பாங்கான கரையோரங்களில் வெயிலை மறந்து ஓய்வெடுக்க தூண்டும் காலநிலை அங்கு நிலவும்.
கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்கும் ஏற்ற இடமாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் அமைந்திருக்கின்றன. வெப்பமண்டல கால நிலையில் விளையும் பழங்கள் மற்றும் இளநீரை சுவைத்துக்கொண்டே கடற்கரை அழகை ரசித்தபடி கோடை விடுமுறையை அனுபவித்துவிட்டு வரலாம்.
மணாலி; பனி மூடிய மலைகள் இந்தியாவின் பிரபலமான கோடை கால இடங்களில் ஒன்றாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி விளங்குகிறது. இங்கு நிலவும் கால நிலையும், இயற்கை அழகும், சாகச பயணங்களும் கோடை விடுமுறையை மறக்க முடியாத நாட்களாக மாற்றிவிடும்.
இந்த அழகிய நகரம் பனி மூடிய மலை சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. கோடையை குளிர்ச்சியான சூழலில் கொண்டாட காரணமாக அமைந்திருக்கிறது. அங்கு ஓடும் பியாஸ் நதி பசுமை படர்ந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
மலையேற்றம், ரிவர் ராப்டிங், பாராகிளைடிங், சோர்பிங் உள்பட அனைத்து வகையான சாகச அனுபவங்களையும் ஒரே இடத்தில் அனுபவித்து விடலாம். பனிகளுக்கு மத்தியில் உற்சாகமாக விளையாடி பொழுதை இனிமையாக கழிக்கலாம்.