தினத்தந்தி
கேரட் வைட்டமின் ஏ சத்து நிறைந்த சிறந்த காய்கறியாகும். இது கண் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், பார்வைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது.
கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட உணவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாகும்.
தேவையான பொருட்கள் : 3 கேரட், 1 பெரிய வெங்காயம், ¼ கப் துருவிய தேங்காய், 2 காய்ந்த சிவப்பு மிளகாய், 1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய், ¼ டீஸ்பூன் கடுகு, ¼ டீஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், 2 கொத்து கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு தேவை.
செய்முறை : முதலில் கேரட்டை நன்றாகக் கழுவி தோலை சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதை லேசாக வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதிகமாக வேகவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
அதன்பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்குங்கள். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இப்போது வேகவைத்த கேரட்டையும் துருவிய தேங்காயையும் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மட்டும் வதக்குங்கள். இதனால் தேங்காயின் மணமும், கேரட்டின் இனிப்புச் சுவையும் நன்றாக ஒன்றாக கலந்துவிடும்.
சுவையான, மணமார்ந்த கேரட் பொரியல் தயார். இந்தப் பொரியல் சாதம், சாம்பார், ரசம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இந்த ஆரோக்கியமான கேரட் பொரியலை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.