தினத்தந்தி
2011ஆம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி, தன்னுடைய கிரிக்கெட்டை மிகவும் சிறு வயதிலேயே தொடங்கிவிட்டார்.
14 வயதில் உலக கிரிக்கெட்டையே மிரட்டிவருகிறார் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது முதலே, இன்று வரை ரசிகர்களுக்கு பிரம்மிப்பை கொடுத்துவருகிறார்.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இளையோர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டியில் வெறும் 80 பந்தில் 15 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் உட்பட 175 ரன்கள் குவித்து பல்வேறு வியப்பூட்டும் சாதனைகளை படைத்துள்ளார்.
சூர்யவன்ஷியின் 175 ரன்கள், சீனியரோ அல்லது ஜூனியரோ ஒட்டுமொத்த ஐ.சி.சி. இறுதிப்போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது.
இளையோர் ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்சர் நொறுக்கிய வீரர் என்ற சாதனைக்கும் (15 சிக்சர்) சொந்தக்காரர் ஆனார்.
இளையோர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் சூர்யவன்ஷி 10-க்கு மேல் சிக்சர் அடிப்பது இது 5-வது முறையாகும். மற்ற பேட்டர்கள் அனைவரும் சேர்ந்தே 3 முறை தான் இவ்வாறு அடித்திருக்கிறார்கள்.
சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதத்தை ருசித்தார். இளையோர் உலகக் கோப்பையில் ஒரு வீரரின் 2-வது மின்னல் வேக சதம் இதுவாகும். இதே உலகக் கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் வில் மலாஜ்சுக் 51 பந்தில் சதம் எடுத்ததே சாதனையாக உள்ளது.
சூர்யவன்ஷி சிக்சர், பவுண்டரிகள் மூலம் மட்டுமே 150 ரன்கள் திரட்டி விட்டார். இளையோர் போட்டியில் இதுவும் ஒரு சாதனையாகும்.