தலைமுடி பராமரிப்பில் இந்த தவறுகளை செய்கிறீர்களா? உடனே நிறுத்துங்கள்!

தினத்தந்தி

கூந்தல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க சரியான பராமரிப்பு அவசியம். ஷாம்பு முதல் மசாஜ் வரை சில எளிய பழக்கங்களை பின்பற்றினால் முடி உதிர்வைக் குறைத்து, கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

குளிப்பதற்கு முன்பு தலைமுடியில் உள்ள சிக்குகளை மெதுவாக அகற்றுங்கள். உங்கள் தலைமுடி தன்மைக்கு ஏற்ற ஷாம்புவை மட்டுமே பயன்படுத்துங்கள். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்பது தவறான எண்ணம். ஷாம்புவை நன்றாக அலசி கழுவுவதும் முக்கியம்.

ஒவ்வொரு முறை தலைக்குக் குளித்த பிறகும் கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது. ஆனால் அதை முடியின் வேரில் அல்லாமல் நுனிப்பகுதியில் மட்டும் தடவ வேண்டும். மேலும், ஷாம்பு போட்ட பிறகு ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து இறுதியாக தலைமுடியை அலசினால், கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

மருதாணி இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. எனவே மருதாணி வைத்த உடனே ஷாம்பு பயன்படுத்தாமல், அதற்கு முந்தைய நாளே ஷாம்புவால் தலைமுடியை சுத்தம் செய்து, மறுநாள் மருதாணி வைத்து வெறும் தண்ணீரில் அலசுவது சிறந்தது.

ஈரமான தலைமுடியை உடனே சீவுவதையோ, வேகமாகத் துடைப்பதையோ தவிர்க்க வேண்டும். டவலில் சில நிமிடங்கள் சுற்றி வைத்த பிறகு இயல்பாக உலர விடுங்கள். ஹேர் ட்ரையரை அதிகமாக பயன்படுத்தாமல், பயன்படுத்தினாலும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் சூடு காட்டாமல் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

தலைமுடியை சீவும்போது அகலமான பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்துவது சிக்குகளை எளிதாக நீக்க உதவும். சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பைப் பயன்படுத்துவதை குறைத்து, விரல்களால் மெதுவாக சிக்குகளை நீக்கலாம். சீப்புகளை அடிக்கடி சுத்தம் செய்வதும் அவசியம்.

வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தடவி விரல் நுனிகளால் மெதுவாக தலைக்கு மசாஜ் செய்யுங்கள். இது தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தலைமுடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது.

இயற்கை பராமரிப்பும் கூந்தலுக்கு நல்ல பலன் தரும். மசித்த வாழைப்பழத்தை தலைமுடியில் 15 நிமிடங்கள் பூசி அலசலாம். அல்லது முட்டை, வெள்ளரிக்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தயாரிக்கும் ஹேர் பேக்கை பயன்படுத்தினால் உலர்ந்த கூந்தலுக்கு ஈரப்பதம் கிடைத்து, முடி மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாக்க இந்த முக்கிய குறிப்புகளை தவறாமல் பின்பற்றுங்கள்!