சாப்பிட்ட பிறகு சோம்பு, பீடா சாப்பிடலாமா? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!

தினத்தந்தி

உணவு சாப்பிட்ட பிறகு சோம்பு அல்லது பீடா சாப்பிடுவது பலரின் வழக்கமாக உள்ளது. குறிப்பாக திருமணங்கள், விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகளில் இது தவறாமல் வழங்கப்படுகிறது. ஆனால், அவை உண்மையில் உடலுக்கு நல்லதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

வெற்றிலை இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவும் தன்மை கொண்டது. இது வாயில் உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, உணவு எளிதாக ஜீரணமாக உதவுகிறது. ஆனால் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு அல்லது புகையிலை சேர்த்து சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது.

பாக்கு மற்றும் சுண்ணாம்பை தொடர்ந்து பயன்படுத்துவது வாய், தொண்டை மற்றும் செரிமான மண்டல புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வெற்றிலை சாப்பிட வேண்டுமெனில், அவற்றை சேர்க்காமல் எடுத்துக்கொள்வதே பாதுகாப்பானது.

இனிப்பு பீடாவை அவ்வப்போது சாப்பிடுவதில் பெரிய பாதிப்பு இல்லை. பொதுவாக அதில் உலர்ந்த பப்பாளி, தேங்காய் துருவல், குல்கந்த் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் பாக்கு சேர்க்காத இனிப்பு பீடாவையே தேர்வு செய்வது நல்லது.

சைவம் அல்லது அசைவம் என எந்த உணவு சாப்பிட்டிருந்தாலும், அதிகமாக சாப்பிட்ட பிறகு வயிற்று அமிலத்தை சமநிலைப்படுத்த வாழைப்பழம், பால் அல்லது பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இவை செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலைத் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதே நேரத்தில், உணவு முடிந்தவுடன் ஐஸ்கிரீம் அல்லது மில்க் ஷேக் எடுத்துக்கொள்வது அனைவருக்கும் அவசியம் என்ற ஆதாரம் இல்லை. சிலருக்கு குளிர்ச்சியான பால் பொருட்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்தே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவுக்குப் பிறகு சோம்பு மென்று சாப்பிடுவது நல்ல பழக்கமாகக் கருதப்படுகிறது. இது வாய்துர்நாற்றத்தை குறைக்கவும், செரிமானத்திற்கு ஓரளவு உதவவும் செய்யும். ஆனால், அதையும் அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விருந்துகளில் பலவகை உணவுகளை ருசிப்பதில் தவறு இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே எவ்வளவு பிடித்தமான உணவாக இருந்தாலும், அளவாக சாப்பிடுவதுதான் ஆரோக்கியமான பழக்கம்.

அரிசியை கழுவி சமைப்பது நல்லதா? ஆய்வுகள் சொல்வது என்ன?