தினத்தந்தி
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தலைவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளித்தாலும், குறிப்பாக வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
பெரும்பாலானோர் வார இறுதி நாட்களில் அதிக நேரத்தை செல்போன், டி.வி., வெப் சீரியல்கள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்களில் செலவிடுகின்றனர். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தோ அல்லது படுத்துக்கொண்டோ திரைகளை தொடர்ந்து பார்ப்பது தலைவலியை ஏற்படுத்தும்.
அதிக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும். இதுவும் தலைவலி உருவாக காரணமாகிறது.
வார நாட்களில் வேலைப்பளு காரணமாக ஒழுங்காக தூங்குபவர்கள், விடுமுறை நாளில் தாமதமாக தூங்கச் செல்வது வழக்கமாகிவிடுகிறது. திரைப்படம் பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவது போன்ற காரணங்களால் தூக்க நேரம் பாதிக்கப்படுகிறது.
தாமதமாக தூங்குவதால் காலையிலும் தாமதமாக எழும் பழக்கம் உருவாகிறது. அன்றாட உடல் கடிகாரத்தில் ஏற்படும் இந்த மாற்றம் தலைவலியை தூண்டக்கூடும்.
வார நாட்களில் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பலர், விடுமுறை நாட்களில் அதை மறந்து விடுகிறார்கள். உடலில் நீர்ச்சத்து குறைவது ஒற்றைத் தலைவலி மற்றும் சாதாரண தலைவலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
விடுமுறை நாட்களில் காபி, டீ, குளிர்பானங்கள் மற்றும் மது போன்றவற்றை அதிகமாக அருந்தும் பழக்கமும் தலைவலியை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக காபினும் ஆல்கஹாலும் தலைவலியை தூண்டும் முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.
மேலும், விடுமுறை நாளிலும் அடுத்த நாள் வேலைகளை பற்றிய சிந்தனை மற்றும் மனஅழுத்தம் தொடர்ந்தால் அது உடலையும் மனதையும் பாதித்து தலைவலிக்கு வழிவகுக்கும்.