தோசைக்கல்லில் படிந்த எண்ணெய் பிசுக்கு போகணுமா? இந்த சூப்பர் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

தினத்தந்தி

இரும்பு தோசைக்கல்லை தொடர்ந்து பயன்படுத்தும்போது, அதன் ஓரங்களில் எண்ணெய் பிசுக்கு படிந்து பிசுபிசுப்பாக மாறிவிடும். இதனால் தோசை மாவு கல்லில் ஒட்டிக்கொண்டு, தோசையை சுலபமாக வார்க்க முடியாமல் போகும். இதனை எளிய முறையில் சுத்தம் செய்யலாம்.

இதற்கு கடைசியாக மீதமாக இருக்கும் புளித்த தோசை மாவையே பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல தோசை மாவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் புளித்த மாவை வீணாக்காமல், தோசைக்கல்லை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.

முதலில் பிசுபிசுப்பாக இருக்கும் தோசைக்கல்லின் ஓரங்களில் புளித்த தோசை மாவை நன்றாகத் தடவி விடுங்கள். பின்னர் அதை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிட வேண்டும். மாவு நன்றாகப் படிந்த எண்ணெய் பிசுக்கை தளரச் செய்யும்.

அதன்பிறகு கூர்மையான கரண்டி அல்லது கத்தியை பயன்படுத்தி தோசைக்கல்லின் ஓரங்களில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கை மெதுவாகச் சுரண்டி எடுக்கலாம். இவ்வாறு செய்தால் படிந்திருந்த அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கு அடுக்கடுக்காக நீங்கும்.

ஆனால் தோசைக்கல்லின் நடுப்பகுதியை கத்தி அல்லது கரண்டியால் அதிகமாகச் சுரண்டக்கூடாது. கல்லின் ஓரங்களில் மட்டும் இந்த முறையைப் பயன்படுத்துவது நல்லது. நடுப்பகுதியில் அதிகமாகச் சுரண்டினால் தோசை ஒட்டாமல் இருக்க உருவான பதம் பாதிக்கப்படலாம்.

இதேபோல் புளித்த தோசை மாவை வைத்து வீட்டில் இருக்கும் ஸ்டீல் குழாய்களையும் சுத்தம் செய்யலாம். குழாய்களில் படிந்திருக்கும் லேசான உப்புக் கறை மற்றும் அழுக்கின் மீது மாவைத் தடவி தேய்த்து கழுவினால் சுத்தமாகலாம்.

குளியலறையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாளி, பக்கெட் போன்ற பொருட்களில் படிந்திருக்கும் லேசான உப்புக் கறைகளையும் புளித்த மாவை வைத்து தேய்த்து சுத்தம் செய்யலாம். பின்னர் தண்ணீரில் நன்றாகக் கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும்.

புளித்த தோசை மாவை செடிகளுக்கும் பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு புளித்த மாவை கலந்து செடிகளுக்கு ஊற்றுவது ஒரு வீட்டு தோட்டப் பயன்பாட்டு முறையாகும். இருப்பினும், அதிகமாகவோ அல்லது அடிக்கடியாகவோ பயன்படுத்தாமல், முதலில் ஒரு சில செடிகளில் மட்டும் சோதித்துப் பார்ப்பது நல்லது.

முளைகட்டிய பச்சைப் பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!