தினத்தந்தி
கேரள கடலை கறி சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும். இன்று இந்த கேரளா ஸ்டைல் கடலை கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : கருப்பு கொண்டைக்கடலை - 150 கிராம், தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி, வெங்காயம் - 1, தக்காளி - 1 ,பச்சை மிள்காய் -1, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகத்தூள் - அரைதேக்கரண்டி, மல்லித்தூள் - 2 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - 2 இணுக்கு, உப்பு - தேவைக்கு.
செய்முறை : கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் ஊறவைத்த கடலையை குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு போட்டு மூடி 10 விசில் விட்டு, வேக வைத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அதனுடன் மல்லிப்பொடி, சீரகப்பொடி, பெருஞ்சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும்.
வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கி கூழ் பதம் வந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவைக்கு தண்ணீர்(கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர்) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து வரவும், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து உப்பு சரிபார்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டித்தன்மை தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்.
சுவையான சத்தான கேரள கடலை கறி ரெடி. வெறும் சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.