இட்லி, தோசைக்கு சூப்பரான தக்காளி குருமா செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: தக்காளி - 3, வெங்காயம் - 1, மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன், மல்லித்தூள் - ½ டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, துருவிய தேங்காய் - ¼ கப், சோம்பு - ¾ டீஸ்பூன், இஞ்சி - ¼ இன்ச், பச்சை மிளகாய் - 1, பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன், கசகசா - 1 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், பட்டை - ¼ இன்ச், கிராம்பு - 2, ஏலக்காய் - 1, பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், சோம்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் கசகசாவை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து நன்கு மசிந்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இறுதியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக கிளறி, பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், மணமும் சுவையும் நிறைந்த தக்காளி குருமா தயார்.

இந்த தக்காளி குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மட்டுமல்லாமல் சாதத்துடனும் மிகவும் சுவையாக இருக்கும்.

பாட்டி கைப்பக்குவத்தில் பாரம்பரிய அதிரசம் செய்வது எப்படி?