AI Deepfake-இல் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

தினத்தந்தி

வெறும் 10 விநாடிகள் உங்கள் குரல் பதிவு இருந்தாலே போதும். நீங்கள் பேசாத விஷயத்தைக்கூட, நீங்கள் பேசியது போல AI தொழில்நுட்பம் உருவாக்கிவிடும். இதுதான் தற்போது அதிகரித்து வரும் டீப்ஃபேக் (Deepfake) மற்றும் வாய்ஸ் குளோனிங் (Voice Cloning) மோசடிகளின் ஆபத்து.

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஒருவரின் முகம் அல்லது குரலை துல்லியமாக நகலெடுத்து, வேறு வீடியோ அல்லது ஆடியோவில் பொருத்துவதே டீப்ஃபேக். இன்றைய AI கருவிகள் மிகவும் துல்லியமாக செயல்படுவதால், உண்மையையும் போலியையும் கண்டறிவது மிகவும் சிரமமாகியுள்ளது.

உங்கள் நண்பரின் குரலில் திடீரென ஒரு அழைப்பு வரலாம். "அவசரமாக மருத்துவமனையில் இருக்கிறேன், உடனே பணம் அனுப்புங்கள்" என்று பதற்றமாக பேசலாம். குரலை நம்பி பணம் அனுப்பிய பிறகுதான் அது AI மூலம் உருவாக்கப்பட்ட போலி குரல் என்பது தெரியவரலாம்.

இதுமட்டுமல்ல, சமூக வலைதளங்களில் இருக்கும் உங்கள் புகைப்படங்களை பயன்படுத்தி, போலியான அல்லது அவதூறு வீடியோக்களை உருவாக்கி மிரட்டும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்த வகையான மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஒரு ரகசிய பாதுகாப்பு வார்த்தை (Safe Word) ஒன்றை முன்கூட்டியே முடிவு செய்து வைத்திருங்கள்.

யாராவது அவசரமாக பணம் கேட்டால், அந்த ரகசிய வார்த்தையைச் சொல்லச் சொல்லுங்கள். உண்மையான நபராக இருந்தால் மட்டுமே அந்த வார்த்தையைச் சரியாக கூற முடியும்.

மேலும், நண்பர் அல்லது உறவினர் பெயரில் பணம் கேட்டு அழைப்பு வந்தால், உடனே பணம் அனுப்பாதீர்கள். அழைப்பை துண்டித்துவிட்டு, அவர்களின் உண்மையான எண்ணுக்கு நீங்களே மீண்டும் அழைத்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட AI மோசடிக்கு நீங்கள் ஆளானால், தாமதிக்காமல் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளுங்கள். மேலும், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சைபர் குற்றப் புகார் தளமான https://www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சி பல நன்மைகளைத் தந்தாலும், அதே அளவு புதிய ஆபத்துகளையும் உருவாக்குகிறது. எனவே, எந்த ஆடியோ, வீடியோ அல்லது அவசர பணக் கோரிக்கையையும் கண்மூடித்தனமாக நம்பாமல், முதலில் உறுதிப்படுத்தி செயல்படுவது தான் உங்கள் பணத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.

தூங்கும்போது "பேய் அமுக்குவது" போல உணர்கிறீர்களா? இதுதான் அறிவியல் சொல்லும் உண்மை!