தினத்தந்தி
40 வயதை கடந்த ஆண்களில் பெரும்பாலானோர் இளமையை தக்க வைப்பதற்காக அதிக முயற்சிகள் எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியம் இல்லாமல் இருந்தால் சரும அழகையும் இழக்க நேரிடும்.
40 வயதை கடந்தவர்கள் உடல் நலத்தை சீராக பேணுவதற்கு போதுமான அளவு நார்ச்சத்து அவசியமானது. அது குடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. செரிமான சக்தியை அதிகரிக்க செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் நார்ச்சத்தின் பங்களிப்பு முக்கியமானது. முழு தானிய வகைகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. அவைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நட்ஸ் வகைகளை சாப்பிடுவதும் நல்லது. ஆரோக்கியத்தை பேணுவதற்கு நட்ஸ் வகைகள் அவசியம். அதில் நார்ச்சத்து, புரதம், செரியூட்டப்படாத கொழுப்பு, ஆன்டிஆக்சிடென்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. நட்ஸ் வகைகளை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமானது. பாலில் கால்சியம் நிறைந்திருக்கிறது. இதயத்தின் நலனையும் காக்கும். தினமும் ஒரு கப் பால் பருகலாம். அது எலும்புகள் மற்றும் மூட்டுகளின் நலனை மேம்படுத்தும்.
'கிரீன் டீ'யும் 40 வயதை கடந்தவர்களுக்கு ஏற்ற பானம்தான். அதில் ஆன்டிஆக்சிடென்ட்டுகள் உள்ளடங்கி இருக்கிறது. நல்ல கொழுப்பின் அளவை சீராக பராமரிக்க உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்தி நச்சுகளை வெளியேற்றும். வயிறு, குடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது.
வயதாகும் போது மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சின்ன சின்ன வியாதிகளுக்கெல்லாம் மாத்திரைகளை நாடுவது நல்லதல்ல. மூலிகை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.