தினத்தந்தி
மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது மட்டுமின்றி, சரியான முறையிலும் உட்கொள்ள வேண்டும். மருந்துகளை பயன்படுத்தும்போது செய்யக்கூடாத தவறுகளை தெரிந்துகொள்வது அவசியம்.
சில மாத்திரைகள் உணவுக்குழாய் வழியாக வயிற்றை அடைய சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். மாத்திரை சாப்பிட்டவுடன் படுத்துக்கொள்வது சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே, மருந்தின் தன்மைக்கு ஏற்ப மருத்துவர் கூறும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
சில மருந்துகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அவற்றை உணவுக்குப் பிறகு எடுத்துக்கொண்டால் மருந்து உடலில் உறிஞ்சப்படும் விதம் மாறலாம். இதனால் மருந்தின் செயல்பாடும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சில மாத்திரைகள் உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றை தவறான நேரத்தில் எடுத்துக்கொள்வது ரத்தச் சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே, மருத்துவர் குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
ஏற்கனவே மருந்து எடுத்துக்கொள்பவர்கள் புதிதாக வேறு மருந்து எடுத்துக்கொள்ளும்போது கவனம் தேவை. மருந்துகளுக்கு இடையே எதிர்வினை ஏற்படுமா என்பதை மருத்துவரிடம் கேட்க வேண்டும். தற்போது எடுத்துக்கொள்ளும் அனைத்து மருந்துகள் பற்றியும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்துகளை சரியான முறையில் சேமிப்பதும் மிகவும் முக்கியம். சில மருந்துகளை குளிர்ச்சியான அல்லது குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டியிருக்கும். மருந்தின் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள சேமிப்பு முறையைப் பின்பற்ற வேண்டும்.
மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள் முழுவதும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல்நிலை சற்று முன்னேறியதும் தாமாகவே மாத்திரைகளை நிறுத்துவது தவறானது. மருந்தை நிறுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.