தினத்தந்தி
கேரளாவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஓணம் முக்கியமானது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள பாரம்பரிய உணவான ஓலனை வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பூசணிக்காய் கீற்று - 2, காராமணி - 1 கப், பச்சை மிளகாய் - 4, தேங்காய்ப்பால் - 1 கப், சேப்பங்கிழங்கு - 3, தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பூசணிக்காயின் தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
சேப்பங்கிழங்கை தனியாக வேகவைத்து, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
காராமணியை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் நறுக்கிய பூசணிக்காய் துண்டுகள், சேப்பங்கிழங்கு, வேகவைத்த காராமணி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
பூசணிக்காய் நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் தேங்காய்ப்பாலை ஊற்றி, அதிக நேரம் கொதிக்க விடாமல் மிதமான தீயில் சிறிது நேரம் சூடாக்கவும்.
கடைசியாக ஒரு சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதை ஓலனில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.
சுவையான கேரள பாரம்பரிய ஓணம் ஸ்பெஷல் ஓலன் தயார். இதை சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.