தினத்தந்தி
விநாயகர் சதுர்த்திக்கு வீட்டிலேயே சுவையான பால் கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படையலிடலாம். கொழுக்கட்டை மாவைப் பயன்படுத்தி எளிய முறையில் தயாரிக்கக்கூடிய இந்த இனிப்பு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்; கொழுக்கட்டை மாவு – 1 கப், வெல்லம் பொடித்தது – ½ கப், பால் – 1 கப், தேங்காய்த்துருவல் – ½ கப், ஏலக்காய்த்தூள் – ½ தேக்கரண்டி, உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை; ஒரு வெறும் வாணலியில் கொழுக்கட்டை மாவைப் போட்டு, தொட்டால் சுடும் அளவுக்கு வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதித்த தண்ணீரை மாவில் ஊற்றி, கரண்டியால் நன்றாகக் கிளறவும்.
மாவு சற்று ஆறியதும், கைகளால் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பின்னர் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், செய்து வைத்த உருண்டைகளைப் போடவும்.
உருண்டைகள் வேகும் வரை கிளற வேண்டாம். 3 முதல் 4 நிமிடங்கள் வேக வைத்த பிறகு, மெதுவாகத் திருப்பி விடவும். பின்னர் அதில் பாலை ஊற்றி, ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி, கொதித்துக் கொண்டிருக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும்.
இறுதியாகத் தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் சற்று கெட்டியாகிவிடும். சுவையான பால் கொழுக்கட்டை தயார். இந்த விநாயகர் சதுர்த்திக்கு வீட்டிலேயே செய்து மகிழுங்கள்!