மிசா சட்டம் என்றால் என்ன? அதன் பின்னணி என்ன?

தினத்தந்தி

1960-களின் இறுதியிலும், 1970-களின் தொடக்கத்திலும் பிரதமர் இந்திரா காந்தி கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடி, உள்நாட்டு போராட்டங்கள் மற்றும் சர்வதேச அழுத்தம் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். இந்தச் சூழல்களே பின்னர் 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலைக்கு முக்கிய பின்னணியாக அமைந்தன.

1964-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் மறைவும், 1966-ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரியின் மறைவும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தின. இதற்கிடையே இந்திரா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரது அரசியல் அணுகுமுறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. இருப்பினும், 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது.

அதே காலகட்டத்தில் பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டது. வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா தலையிட்டதன் விளைவாக வங்கதேசம் தனி நாடாக உருவானது. இது இந்திரா காந்தியின் முக்கிய அரசியல் மற்றும் ராஜதந்திர சாதனையாகக் கருதப்பட்டாலும், சர்வதேச அளவில் பல்வேறு அழுத்தங்களையும் அவர் எதிர்கொண்டார்.

இதனுடன், நாட்டின் பல பகுதிகளில் இந்திரா காந்தி அரசுக்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்தன. கட்சி அரசியல், உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் எனப் பல்வேறு தளங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள் அவரது அரசுக்கு சவாலாக அமைந்தன.

1971-ஆம் ஆண்டு தேர்தலில் அரசு அதிகாரியைத் தனது தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியதாக இந்திரா காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக 1975-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரது தேர்தல் வெற்றியை செல்லாது எனத் தீர்ப்பளித்தது. இதனால் அவரது அரசியல் எதிர்காலம் மேலும் நெருக்கடிக்குள்ளானது.

1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்யவும் பல்வேறு சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் முக்கியமானதாக மிசா சட்டம் இருந்தது.

மிசா என்பது Maintenance of Internal Security Act என்பதன் சுருக்கமாகும். தமிழில் இது இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி ஒருவரைத் தடுப்புக் காவலில் வைக்க அரசுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

மிசா சட்டத்தின் கீழ் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலும் மு.க. ஸ்டாலின், முரசொலி மாறன் உள்ளிட்டோர் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிட்டிபாபு சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில், பின்னர் 1977-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பின்னர் 1978-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மிசா சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்திய ஜனநாயக வரலாற்றில் நெருக்கடி நிலையும் மிசா சட்டமும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் சுதந்திரம் தொடர்பான முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களாக இன்றும் நினைவுகூரப்படுகின்றன.

முட்டையை விட 10 மடங்கு சத்து அதிகம் எது தெரியுமா..?