தினத்தந்தி
தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, ஏலகிரி மலை. தமிழகத்தின் பிரபல சுற்று லாத் தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல ஏலகிரியும் சிறந்த சுற்றுலாத் தலமாகும்.
இந்த ஏலகிரி மலைக்கு 'ஏழைகளின் ஊட்டி' என்ற அடைமொழியும் உண்டு. எப்போதுமே இதமான குளிர் கொண்ட காலநிலையுடன் இருக்கும் ஒரு அமைதியான மலைவாசஸ்தலம் ஏலகிரி
படகு சவாரி; ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் மனதை மயக்குவதாக புங்கனூர் ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கைப் பூங்கா, சிறுவர் பூங்கா; ஏரிக்கு அருகிலேயே, குழந்தைகள் விளையாடிக் களிக்க பூங்காவும் உண்டு. தமிழக வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் மூலிகைப் பண்ணையும் ஏரியின் அருகில் அமைந்திருக்கிறது. அரசு பழப்பண்ணையும் இருக்கிறது.
மங்கலம் சுவாமிமலை ஏற்றம்; இந்தப் பகுதி, மலை ஏறுபவர்களுக்கு சொர்க்கமாகத் திகழும் இடமாகும். இந்தப் பயணத்தில், வண்ணமயமான பல தாவரங்களையும், விலங்குகளையும் கண்டு வியக்கலாம், ஏலகிரி மலையின் அழகையும் அணு அணுவாக ரசிக்கலாம்.
நிலாவூர்; இந்தக் கிராமத்தில் ஈர்ப்பு அம்சம், நிலாவூர் வியூ பாயின்ட். இங்கு அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தின் மீது ஏறி, ஏலகிரி மலையின் அழ கையும், பள்ளத்தாக்கையும் பார்த்து ரசிக்கலாம். இங்கு சூரியன் உதிப்பதையும், மறைவதையும் காண்பது, மிகவும் ரம்மியமான அனுபவம்.
ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களிலும் நடைபெறும் மலைவாழ் மக்களின் மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ஏலகிரி மலையில் 14 வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளுக்கு, பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், கபிலர், அவ்வையார், பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நல்லி, பேகன் என பெருமைக்குரிய தமிழ்க் கவிஞர்கள், கடையேழு வள்ளல்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.