தினத்தந்தி
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் அக்னி செய்தி சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் கூறியதாவது:
சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, பொதுமக்களிடம் மாநிலம் தழுவிய அளவில் கருத்துக்கணிப்பை நடத்தினோம்.
எங்களின் 2-வது கட்ட கருத்துக்கணிப்பில் மக்கள் மனநிலை எப்படி உள்ளது என்பதைத் துல்லியமாக அறிய சுமார் ஒரு லட்சம் பேரிடம் நேரில் சென்று தரவுகளைச் சேகரித்தோம்.
அதன்படி, தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிக்கும் என்றே எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது.
234 தொகுதிகளில் சுமார் 180 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். அதன் வாக்கு வங்கி 44.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி சுமார் 38.5 சதவீத வாக்குகளைப் பெற்று 54 இடங்கள் வரை வெற்றி பெறும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 9.7 சதவீத வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடிக்கும்.
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் 4.8 சதவீத ஆதரவு உள்ளது. நாங்கள் 3-வது கட்ட கருத்துக்கணிப்பை ஏப்ரல் 19-ஆம் தேதி நடத்த உள்ளோம்.