தீபாவளி இனிப்பு: செட்டிநாடு வெல்ல அதிரசம்.!!

அனைவருக்கும் அதிரசம் மிகவும் பிடிக்கும். மிகவும் சுலபமான முறையில் இந்த செட்டிநாடு வெல்ல அதிரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : அரிசி - அரை கிலோ, வெல்லம் - 300 கிராம், ஏலக்காய் - சிறிதளவு, நெய் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை : முதலில் பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும்.
அரிசி அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ள போதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, வெல்லப்பாகினை தயார் செய்யவும்.
பாகை கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்க வேண்டும். பின்னர் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.
பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும்.
ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது.
தேவைப்படும் போது அதிரசங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சத்தான சுவையான இனிப்பு அதிரசம் தயார்.
Explore