பெண்களுக்கான வேலைவாய்ப்பு

கிராமப்புறங்களின் பொருளாதாரத்தையும், பெண்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதில் நாட்டுக்கோழி வளர்ப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

Update: 2018-01-28 09:00 GMT
நாட்டுக்கோழி வளர்ப்பு

கிராமப்புறங்களின் பொருளாதாரத்தையும், பெண்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதில் நாட்டுக்கோழி வளர்ப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கறிக்கோழியின் விலையை விட நாட்டுக்கோழி இறைச்சியின் விலை அதிகம். அதனால் வணிக சந்தையில் நாட்டுக் கோழியை நல்ல விலைக்கு விற்பனை செய்து, லாபம் ஈட்ட முடியும். முட்டை, இறைச்சிக்காக நாட்டுக்கோழி வளர்த்து, பராமரித்து, விற்பனை செய்யும் விதம் பற்றி இந்த வாரம் பார்ப்போம்!

நாட்டுக் கோழி இனங்கள்:

1. அசீல்

2. கடக்நாத் அல்லது கருங்கால் கோழி

3. மொட்டை கழுத்து கோழி

4. பஸ்ரா

5. சிட்டகாங்

6. நிக்கோபாரி

தரம் உயர்த்தப்பட்ட கோழிகள்:

1. நாமக்கல் கோழி 1

2. நந்தனம் கோழி 2

3. வனராஜா

4. கிரிராஜா

(புழக்கடை வளர்ப்புக்கென்று தரம் உயர்த்தப்பட்ட கோழிகளாக இவைகள் விளங்குகிறது)

அசீல்: இந்த கோழியின் தாயகம் ஆந்திரபிரதேசம். இது நாட்டின் பெருமை மிக்க பெரிய கோழி இனமாக விளங்குகிறது. சக்தி வாய்ந்த, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியுடன் சண்டை போடும் திறன் கொண்டது. இதை சேவல் சண்டை விளையாட்டுக்கும், முட்டை மற்றும் இறைச்சிக்காகவும் பயன் படுத்தலாம்.

இக்கோழியின் அலகு குட்டையாகவும், வளைந்தும் காணப்படும். முகம் நீளமாகவும், கழுத்து பகுதி நீண்டும், வால் சிறியதாகவும் இருக்கும். மேலும் உயரமான, உறுதியான கால்களை கொண்டிருக்கும். சேவல் கோழியின் உடல் எடை 3 முதல் 4 கிலோ வரையிலும், பெட்டை கோழியின் எடை 2 முதல் 3 கிலோ வரையிலும் இருக்கும். ஆண்டுக்கு 90 முதல் 100 முட்டைகளை இடும் தன்மை கொண்டது.

கடக்நாத் அல்லது கருங்கால் கோழி: இந்தவகை கோழி இனத்தின் தாயகம் மத்தியபிரதேசம். இவற்றின் உடல் உள் உறுப்புகள் கருமை நிறமாக இருப்பது கூடுதல் சிறப்பம்சம். இவை பெரும்பாலும் இறைச்சிக்காகவே வளர்க்கப்படும். ஆண்டுக்கு 100 முட்டைகள் வரை ஈடும். சேவல் மற்றும் பெட்டை கோழிகள் 1 கிலோ எடை வரையே கொண்டிருக்கும்.

மொட்டை கழுத்துக்கோழி: இந்த வகை கோழி இனங்கள் திருவனந்தபுரத்தை தாயகமாக கொண்டவை. கழுத்துப் பகுதியில் இறகுகள் இல்லாமலும், கழுத்தின் முற்பகுதியில் கொத்தாக சிறகுகளும் காணப்படுவது இதன் சிறப்பு அம்சம். இக்கோழிகள் இறைச்சிக்காக அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

பஸ்ரா: குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை சார்ந்த இந்த கோழி இனமும் இறைச்சிக்காகவே வளர்க்கப் படுகிறது. இக்கோழிகளின் இறகுகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்திருக்கும். கழுத்தின் மேல்புறம், வால்பகுதி, தோள்பட்டை இறக்கைகள் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

சிட்டகாங்: இக்கோழிகள் பெரிய உடல் வாகு கொண்டது. எதிரியுடன் இறுதிவரை போராடும் வல்லமை படைத்தது. சிறந்த சண்டை கோழி இனமான இவற்றின் பிறப்பிடம் மேகாலயா மற்றும் திரிபுராவாகும்.

நிக்கோபாரி: அந்தமான் தீவை சேர்ந்த இந்த இனமானது, பழுப்பு, கருப்பு, வெள்ளை நிறத்தில் காணப்படும். சிறிய உடல் அமைப்பு, குட்டையான கால்கள் மற்றும் கழுத்து அமைப்பை கொண்டிருக்கும். நாட்டுக்கோழி இனங்களிலேயே இந்த இனம்தான் அதிகளவில் முட்டைகளை இடும் குணாதிசயங்கள் உடையது. ஆண்டுக்கு 160 முட்டைகள் வரையில் இடும்.

நாமக்கல் கோழி-1: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக கோழியின ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட இனம் இது. புதிய கலப்பினமான இந்த வகை கோழியின் சிறகுகள் பல வண்ணங்களில் காணப்படும். அடைக்காக்கும் தன்மை இந்த வகை கோழிக்கு கிடையாது. இவை பெரும்பாலும் முட்டைகளுக்காகவே வளர்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 150 முட்டைகள் வரை இடும். சேவல் கோழியின் எடை 2 கிலோவாகவும், பெட்டை கோழியின் எடை 1 கிலோவாகவும் இருக்கும்.

நந்தனம் கோழி-2: இந்தக்கோழி இனமும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கோழியின ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்டது. அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்ட இவை, கிராமப் புறங்கள் மட்டுமல்லாது நகர்புறங்களில் உள்ள வீடுகளிலும் வளர்க்க ஏற்றவை. ஆண்டுக்கு 140 முதல் 160 முட்டைகளை இந்த வகை கோழிகள் இடுகின்றன.

வனராஜா: ஐதராபாத்தில் உள்ள கோழி ஆராய்ச்சி திட்ட இயக்குனரகத்தால் உருவாக்கப்பட்ட இனம், வனராஜா. இதன் இறகுகள் பல வண்ணங்களை கொண்டிருக்கும். இவையும் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகிறது. சேவல் கோழியின் எடை 4 கிலோவும், பெட்டை கோழி 2 கிலோவும் எடை கொண்டிருக்கும். ஆண்டுக்கு முட்டை உற்பத்தி 150 முதல் 160 வரையில் இருக்கும்.

கிரிராஜா: பெங்களூரு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், இதன் தாயகம். இந்த கோழியின் சிறகுகள் பல வண்ணங்களில் அழகுற காட்சியளிக்கும்.

இடம் தேர்வு செய்தல்: பொதுவாக பண்ணை அமைய கூடிய இடத்தை தேர்வு செய்யும் போது, தண்ணீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடக்கூடிய நல்ல மேடான இடமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொட்டகையின் தரை பகுதி 2 அடி உயரத்தில் இருப்பது நல்லது. களிமண் நிலமாக இருந்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி பலவித நோய்கிருமிகள் வளர வாய்ப்பு உண்டு. மணற்பாங்கான இடமாக இருந்தால், வறண்ட காலத்தில் காற்று வேகமாக வீசும் போது புழுதி பறந்து கோழிகளின் கண்களையும், சுவாசத்தையும் பாதிக்க கூடும். ஆகையால் இருவகை மண்ணும் சரிவர கலந்த நிலமே வளர்ப்பிற்கு ஏற்ற இடமாகும்.

கொட்டகை அமைப்பு: பண்ணையின் கூரை அமைப்பை வசதிக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கட்டிடத்தை கிழக்கு மேற்காக நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களை கூரை வரை உயரமாக கட்டுவது சிறந்ததாகும். பண்ணை கட்டிடத்தின் உயரம் குறைந்தது 8 அடியாக இருக்க வேண்டும். பக்கவாட்டு சுவர் 6 அடி நீளம் வரை இருந்தால் போதுமானது. இதில் கம்பி வலைகளை அமைக்கும்போது, எலி, பெருச்சாளிகள் போன்றவை எதுவும் நுழையாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். கூரைப்பகுதியை தென்னங்கீற்று, கல்நார் கீற்று, ஓடு கொண்டும் அமைக்கலாம்.

கோழிகள் வளர்ப்பு முறை: கிராமங்களில் உள்ள வீடுகளில் நாட்டுக்கோழிகள் இரவு நேரங்களில் வீட்டுக்கூரைகள், கூடைகள், மரப்பெட்டிகள், வீட்டின் முன்பு உள்ள திண்ணைகளின் கீழ் பகுதியில் அமைக்கப்படும் கூண்டுகள் போன்றவற்றில் அடைத்து வைக்கப்படுகிறது. இவைகளை தவிர தென்னங்கீற்று அல்லது மஞ்சம்புல்லால் கொட்டகை அமைத்தும், ஆஸ்பெட்டாஸ் சீட், மங்களூர் ஓட்டுக்கூரை அமைத்தும் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கலாம்.

வணிக முறையில் நாட்டு கோழிகளை வளர்க்க முற்படுவோர் ஆழ்கூளம், கூண்டு முறை மற்றும் புழக் கடையில் கூண்டு முறையையும் பின்பற்றலாம். இதில் பண்ணை அமைக்க திட்டமிடுபவர்கள் நாட்டுக் கோழி களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பண்ணை வீடுகளை அமைத்துவிட வேண்டும். மேலும் சமச்சீரான தீவனம் வழங்குவதும் அவசியமாகும்.

ஆழ்கூள முறை: இந்த முறையில் கோழிகளை பராமரிப்பது மிகவும் எளிதாகும். நெல் உமி, தேங்காய் நார், மரத்தூள் ஆகியவற்றை கொட்டகையின் உள்ளே சிமெண்டு தரை முழுவதும் பரப்பி கோழி குஞ்சுகளை வளர்க்க வேண்டும்.

இது வெப்ப மண்டல பிரதேசங்களுக்கு ஏற்ற முறையாகும். 1 கிலோ எடை வரும் வரையில் ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி இடம் தேவையாகும். இதில் இறப்பு விகிதம் என்பது 10 சதவீதம் அளவுக்கு குறைவாகவும், ஈ தொல்லை சற்று குறைவாகவும் இருக்கும்.

கூண்டு முறை: இதற்கு ஆரம்ப முதலீடு சற்று அதிகம் தேவைப்படும். எனினும் குறைந்த இட வசதியில் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை வளர்க்க முடியும். ஒரு கோழி 1 கிலோ எடை வரும் வரையில் 6 சதுர அடி இடத்தில் 10 கோழிகளை வளர்க்கலாம். கூண்டு முறை வளர்ப்பில் ஒட்டுமொத்தமாக பராமரிப்பது எளிதாக இருப்பதுடன், நோய் தாக்கம் குறைவாக இருக்கும். கோழிகள் சுத்தமாகவும் வளரும். மேலும் இந்த முறையில் கோழி குஞ்சுகள் 5 முதல் 6-வது மாதத்தில் விற் பனைக்கு தயாராகி விடும்.

குடிநீர் தொட்டி அமைப்பு: நாட்டுக்கோழிகள் நன்றாக வளர தேவையான அளவுக்கு தண்ணீர் அளிப்பது அவசியமாகும். ஏனெனில் கோழிகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களை கொடுத்தாலும் தண்ணீர் தேவையான அளவு கிடைக்காத பட்சத்தில் செரிமானம் ஆவதும், சத்துகள் உடலில் உறிஞ்சப் படுவதும் பாதிக்கப்படும். எனவே தரமான, சுத்தமான கடின தன்மையற்ற குடிநீரை தேவையான அளவுக்கு கொடுக்க வேண்டும். குஞ்சுகளுக்கு முதல் 20 நாட் களுக்கு 24 செ.மீ. விட்டம், 28 செ.மீ. உயரமுடைய ஒரு குடிநீர் தொட்டியும், அதன் பின்னர் 30 செ.மீ. விட்டம், 55 செ.மீ. உயரமுடைய மற்றொரு குடிநீர் தொட்டியும் அமைக்க வேண்டும். இது 40 கோழிகளுக்கு போதுமானதாக இருக்கும். பிளீச்சிங் பவுடரை உபயோகப் படுத்தி தண்ணீரை எளிதாக சுத்தப்படுத்தி விடலாம்.

முட்டையிடுதல்: நாட்டுக்கோழிகள் 6 மாதத்தில் இனச்சேர்க்கைக்கு தயாராகி முட்டையிட தொடங்கும். முட்டையின் எடை 35 முதல் 50 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு பெட்டை நாட்டுக்கோழி 2 முதல் 5 நாட்கள் முட்டை இட்ட பின்னர் ஓரிரு நாட்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் முட்டையிட தொடங்கும். முட்டையிடுவதற்கென்று, தனியாக ஒவ்வொரு கோழிக்கும் ஒரு பெட்டி வைப்பது அவசியமாகும். இதேபோல் சேவலையும் 6 மாதத்திற்கு பின்னர் இன சேர்க்கைக்கு பயன்படுத்தலாம்.

குஞ்சு பொரித்தல்: குஞ்சு பொரித்தல் முறை இரு வகைப்படும். அடை கோழி மூலம் குஞ்சு பொரித்தல் முறையில், அடைகோழிகள் தன் இறக்கைகளாலோ, கால்களினாலோ அதன் அடை முட்டைகளை திருப்பி விடும். இது முட்டையின் உள்ளே வளரும் கருவிற்கு பாதுகாப்பை கொடுக்கும். ஓட்டுடன் ஒட்டுவதை தவிர்க்கவும் உதவும்.

இதை தவிர்த்து, குஞ்சு பொரிப்பான் சாதனத்தை கொண்டும் குஞ்சுகளை பொரிக்க வைக்க இயலும். சிறிய வகை பொரிப்பான் எந்திரத்தின் மூலம் சுமார் 150 முட்டைகளை பொரிக்க வைக்க இயலும். இந்த பொரிப்பான் சாதனம் மின்சாரம் அல்லது மண்எண்ணெயில் இயங்கும் தன்மை கொண்டதாகும். அதில் அடை முட்டையை அதன் அகலமான பகுதி மேல் நோக்கி இருக்கு மாறு, அடுக்கி வைக்க வேண்டும். இல்லையெனில் அப்படியே தட்டில் வைக்கலாம்.

வெப்பநிலையானது 99.75 டிகிரி பாரன்ஹீட் அளவும், ஈரப்பதம் 60 சதவீதம் அளவிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அடை முட்டையை தினமும் ஒரு முறை திருப்பி போடுவது நல்லது. முட்டையில் உள்ள கரு வளர் நிலையை 5 நாட்களுக்குள்ளாகவே நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

அடை வைத்த நாளில் இருந்து 19 முதல் 21 நாட்களில் வெப்பநிலை 99 டிகிரி பாரன்ஹீட் அளவிலும், ஈரப்பதம் 70 விழுக்காட்டிலும் இருக்க வேண்டும். அதன் பிறகு அடை முட்டையை திருப்பக்கூடாது. இவ்வாறு முறையாக பராமரிப்பு செய்து வந்தால் 100 முட்டைகளில் சுமார் 80 முதல் 85 குஞ்சுகள் பொரிக்கும்.

இளம் குஞ்சுகள் பராமரிப்பு: புழக்கடை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு தாய் கோழியே சிறந்த பராமரிப்பை கொடுக்கும். குஞ்சுகளை தனது இறக்கைகளுக்குள் அரவணைத்து அதற்கு தேவையான வெப்பத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும். ஆனால் ஆழ்கூள முறையை பொறுத்தவரையில் செயற்கை முறையில் வெப்பத்தை அளிப்பது அவசியமாகும். இதில் உள்ள அடை காப்பானில் வெப்ப அளவிற்கேற்ப குஞ்சுகள் நடமாட்டம் இருக்கும். மேலும் தீவனம், குடிநீர் தொட்டிகளும் அடைகாப்பானில் அமைக்கப்பட வேண்டும்.

இத்தகைய வழிமுறைகளை பின்பற்றினால் லாபகரமான தொழிலாகவே நாட்டுக் கோழி வளர்ப்பு அமையும்.

(நாட்டுக்கோழி வளர்ப்பு தொடரும்)

தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர்,

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.

மேலும் செய்திகள்