என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்: நாளை மறுதினம் தொடங்க வாய்ப்பு


என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்: நாளை மறுதினம் தொடங்க வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, இதற்கான அறிவிப்பை இன்றோ அல்லது நாளையோ வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு 6-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது தேர்தல் காலமாக இருப்பதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே பிளஸ்-2 முடித்து உயர்கல்வியில் சேருவதற்கு விரும்பும் மாணவ-மாணவிகள் பெரும்பாலானோரின் தேர்வாக என்ஜினீயரிங் படிப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும், அதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக ஆன்லைன் விண்ணப்பப் பதிவை எப்போது தொடங்கலாம் என்ற ஆலோசனையை உயர்கல்வித் துறை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளது.

அதன்படி, என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க வாய்ப்பு இருப்பதாக என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அந்த துறையின் அமைச்சர் இன்றோ (வெள்ளிக்கிழமை) அல்லது நாளையோ (சனிக்கிழமை) வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதும், ஜூலை 2-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Next Story