பார்ட்டியால் வந்த விபரீதம்


பார்ட்டியால் வந்த விபரீதம்
x
தினத்தந்தி 21 Dec 2021 9:54 AM GMT (Updated: 21 Dec 2021 9:54 AM GMT)

ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சினிமாத் துறையில் பார்ட்டி என்பது மிகவும் சகஜமான ஒன்றுதான். அதுவும் பாலிவுட்டில் இது தினமும் நடைபெறும் வாடிக்கையான விஷயம். தற்போதைய கொரோனா காலகட்டத்தினால், சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள், பலர் கூடும் இடங்களில் பார்ட்டி கொண்டாடுவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். 

ஆனாலும் அரசின் சட்டத்திட்டங்களை மதிக்காமல், யாருக்கும் தெரியாமல் ஒன்று கூடி பார்ட்டி நடத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்போது இந்தியாவுக்குள், ஒமைக்ரான் வேகமாக பரவிவரும் வேளையில், இதை அனைவரும் தவிர்ப்பதுதான் நல்லது. அதனை பறைசாற்றும் விதமாகத்தான், பாலிவுட்டில் பார்ட்டியில் கலந்து கொண்ட இரண்டு நடிகைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பாலிவுட் நடிகை கரீனாகபூர், அம்ரிதா அரோரா, கரீஷ்மா கபூர் ஆகியோர் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதை முடித்துக் கொண்டு பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் அளித்த விருந்து ஒன்றிலும் பங்கேற்றுள்ளனர். இதில் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து அந்த இரு நடிகைகளோடு, பார்ட்டியில் பங்கேற்ற பலரும் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கரீனா கபூர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story