திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு


திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
x
தினத்தந்தி 4 Dec 2021 8:42 AM GMT (Updated: 4 Dec 2021 8:42 AM GMT)

மாமல்லபுரத்தில் சிற்ப கலைஞர் தொழிற்பூங்கா அமைக்கும் பணியையும், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் 6 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணியையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டு கொண்டார்.

திருவள்ளூர்,

தமிழக அரசின் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ‘சிட்கோ’ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த துறையின் செயலாளர் வி.அருண்ராய், நிர்வாக இயக்குனர் ஆர்.கஜலட்சுமி, ‘சிட்கோ’ பொதுமேலாளர் ரா.பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள 100 தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை பத்திர அனுமதி ஆணைகளை வழங்கினார். மேலும் அவர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் வாயிலாக புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின் கீழ் 9 கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.16.22 லட்சம் மானியமாகவும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் நடைபெற்ற சிறந்த கண்டுபிடிப்பு சவால் நிகழ்ச்சியில் சிறந்த தீர்வுகளை கூறிய 2 நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.5.75 லட்சத்துக்கான காசோலையும், 2-ம் பரிசாக ரூ.3.75 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழ்நாடு சிட்கோ மூலம் ஏற்கனவே 122 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை கொண்டு வருவதற்கு ஏதுவாக இந்த அரசு திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 413 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.241 கோடி மதிப்பில் மேலும் 5 புதிய தொழிற்பேட்டைகளும், கோவை மாவட்டத்தில் ரூ.35.63 கோடி மதிப்பில் 50 சதவீத அரசு மானியத்துடன் ஒரு புதிய தனியார் தொழிற்பேட்டை உருவாக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் நில உரிமை துறைகளுடன் கலந்து பேசி திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உலக புகழ் பெற்ற மாமல்லபுரத்தில் சிற்பகலைஞர் தொழிற்பூங்கா ரூ.23 கோடி மதிப்பில் 19 ஏக்கர் மதிப்பில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியினையும் கோவை மாவட்டம் சொலவம்பாளையத்தில் புதிய தனியார் தொழிற்பேட்டையும், செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் போன்ற பகுதிகளில் தொடங்கப்பட உள்ள புதிய தொழிற்பேட்டைகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் முன்மொழிவு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து அரசுக்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுஉற்பத்திகட்டமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் வெள்ளாளலூர், மதுக்கரை மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய 3 இடங்களில் பொது வசதி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், அட்டைப்பெட்டி அச்சடித்தல், உணவுப்பொருள் பதப்படுத்துதல், கயிறு தயாரித்தல் மற்றும் போட்டோகிராப் போன்ற தொழில்களுக்கு 5 பொது வசதி மையங்கள் ரூ.55 கோடியில் அமைக்க, ஒன்றியஅரசின் பங்கினைபெற புதிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள் தங்குவதற்கு குறைவான வாடகை குடியிருப்புகள் கட்டுவதற்காக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 800 தொழிலாளர்கள் தங்குவதற்காக 1.21 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.29.47 கோடி மதிப்பீட்டில் 5 மாடிகளுடன் கட்டிடம் கட்டவும், கோவை தொழிற்பேட்டையில் 1,000 தொழிலாளர்கள் தங்குவதற்காக 4.82 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.33.84 கோடி மதிப்பீட்டில் 7 மாடிகளுடன் கட்டிடம் கட்டும் பணியினை விரைந்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story