ராட்சத அலையில் சிக்கி இரண்டாக உடைந்த பைபர் படகு; 4 மீனவர்கள் உயிர் தப்பினர்


ராட்சத அலையில் சிக்கி இரண்டாக உடைந்த பைபர் படகு; 4 மீனவர்கள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 5 Dec 2021 9:56 AM GMT (Updated: 5 Dec 2021 9:56 AM GMT)

கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலையில் சி்க்கிய பைபர் படகு நடுக்கடலில் இரண்டாக உடைந்தது. அதில் இருந்த 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பைபர் படகு உடைந்தது

எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ரோகித், ஹரிஷ், கோவிந்த் ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் பிடித்த மீன்களுடன் நேற்று காலை கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கடல் சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கிய அவர்களது பைபர் படகு நடுக்கடலில் தூக்கி வீசப்பட்டு இரண்டாக உடைந்தது. இதனால் பைபர் படகில் இருந்த மீன்கள் மற்றும் வலைகள் கடலில் மூழ்கின.

மீனவர்கள் உயிர் தப்பினர்

படகில் இருந்த அதன் உரிமையாளர் பத்மநாபன், ஹரிஷ், கோவிந்த் ஆகிய 3 மீனவர்களும் கடலில் நீச்சலடித்து கரைக்கு பத்திரமாக திரும்பிவிட்டனர். ரோகித் என்ற மீனவர் மட்டும் கடலில் ராட்சத அலையில் சிக்கி உடைந்த படகின் பாகத்தை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடியபடி கடலில் தத்தளித்து கொண்டிருந்தார்.

தப்பித்து கரை ஏறிய மீனவர்கள், கரையில் இருந்த மீனவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் வேறு ஒரு பைபர் படகில் கடலுக்குள் சென்று உயிருக்கு போராடிய ரோகித்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கடல் சீற்றத்தால் பைபர் படகு உடைந்து கடலில் மூழ்கினாலும், மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story