கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தால் தரைப்பாலம் சேதம்


கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தால் தரைப்பாலம் சேதம்
x
தினத்தந்தி 9 Dec 2021 3:58 PM GMT (Updated: 9 Dec 2021 3:58 PM GMT)

மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்தது. சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரைப்பாலம் சேதம்

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று இருந்தது. இதன் வழியாக மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்று வந்தனர்.

இந்தநிலையில், கடந்த ஒரு மாத காலமாக பூண்டி நீர்த்தேக்கத்தின் வழியாக உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி சேதம் அடைந்தது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

இதையொட்டி, வெங்கல் போலீசார் கொசஸ்தலை ஆற்றை யாரும் கடந்து செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இப்பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 5-ம்தேதி காலை முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப் பாதைகளில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி திருவள்ளூர் சென்று வருகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

இதுகுறித்து, தகவல் அறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்ட நிலையில், போர்க்கால அடிப்படையில் தரைப்பாலத்தை சீரமைத்து போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், வடகிழக்கு பருவ மழையால் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால் தரைப்பாலம் அமைக்கும் பணி முற்றிலும் தடைபட்டது. தற்போது கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் குறைந்ததன் காரணமாக சேதமடைந்த தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story