கொலை முயற்சி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை


கொலை முயற்சி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 13 Dec 2021 4:28 PM GMT (Updated: 13 Dec 2021 4:28 PM GMT)

கொலை முயற்சி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

பொள்ளாச்சி

கொலை முயற்சி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி சப் -கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நிதி நிறுவன உரிமையாளர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சேர்ந்தவர் உத்திரராஜ் (வயது 41). இவர் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தாத்தூரை சேர்ந்த சேவியர் என்பவருக்கு உத்திர ராஜிடம் இருந்து கடனாக பணம் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் சேவியர் அந்த பணத்தை முறையாக செலுத்தவில்லை. இந்த நிலையில் உத்திரராஜ் ஜெயக்குமாரிடம் சென்று பணத்தை கேட்டு தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து ஜெயகுமார் அவரது நண்பர் செந்தில்குமார் அழைத்துக்கொண்டு உத்திர ராஜிடம் இதுகுறித்து கேட்டு உள்ளார். அதன்பிறகு இரவு உத்திர ராஜ் ஜெயக்குமார் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து அவர் செந்தில் குமாரை வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தடுக்க சென்ற ஜெயக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

6 ஆண்டு சிறை

இதுகுறித்து ஆனைமலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உத்திர ராஜை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட உத்திர ராஜூக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தேவசேனாதிபதி ஆஜராகி வாதாடினார். 

Next Story