ஆருத்ரா தரிசன விழா


ஆருத்ரா தரிசன விழா
x
தினத்தந்தி 20 Dec 2021 4:27 PM GMT (Updated: 20 Dec 2021 4:27 PM GMT)

பொள்ளாச்சியில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

ஆருத்ரா தரிசன விழா 

பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

 இதைத்தொடர்ந்து நடராஜருக்கும், சிவகாமியம்மாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.

ராஜ அலங்காரம்

வழக்கமாக ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜரும், சிவகாமியம்மாளும் தனித்தனி பல்லக்கில் கோவிலுக்கு வெளியே உள்ள பட்டி விநாயகரை சுற்றி வருவார்கள். இதைத்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக வீதி உலா நடைபெறவில்லை.

பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்ஊத்துக்குளி சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சோமசுந்தரேஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சி

முன்னதாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோன்று பொள்ளாச்சி ஜோதி நகர் விசாலாட்சி உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோவில், திப்பம்பட்டி மலையாண்டிஈஸ்வரர் உடனமர் சக்தியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவலோகநாதர் கோவில்

கிணத்துக்கடவில் உள்ள சிவலோகநாதர் உடனமர் சிவலோகநாயகி கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிவலோகநாதர் உடனமர் சிவலோகநாயகிக்கு திருபள்ளி எழுச்சி, திருமஞ்சன வழிபாடு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நடராஜருக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், நெல்லி பொடி, வில்வபொடி, பஞ்சாமிர்தம், தேன், நெய், கரும்புசாறு, மாதுளை, திராட்சை, சாத்துக்குடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் 108 அர்ச்சனை நடைபெற்றது. 

இதையடுத்து நடராஜர், சிவகாமிய அம்மையார் சிறப்பு அலங்காரத்தில் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில் மலையை சுற்றி திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story