கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 22 Dec 2021 9:49 AM GMT (Updated: 22 Dec 2021 9:49 AM GMT)

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 2 மினிவேன்கள் ஆகியனவற்றையும் பறிமுதல் செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒலிமுகம்மது பேட்டையை அடுத்த காவாங்கரை தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகளை தமிழக பதிவு எண் கொண்ட ஒரு லாரியிலிருந்து கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு லாரிக்கு சிலர் மாற்றிக் கொண்டிருந்துள்ளனர். இந்த தகவல் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வத்துக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது தலைமையிலான வருவாய்த்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

இவர்கள் வருவதை அறிந்த அங்கிருந்தவர்கள் லாரியை விட்டுவிட்டு தப்பிப்சென்று தலைமறைவாகினர்.

இந்தநிலையில் வருவாய்த்துறையினர் லாரியை சோதனை செய்தனர். அப்போது 350 ரேஷன் அரிசி மூட்டைகளில் 20 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை கர்நாடக மாநிலத்துக்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அரிசி மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 2 மினிவேன்கள் ஆகியனவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Next Story