ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் பலி


ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 26 Dec 2021 9:30 AM GMT (Updated: 26 Dec 2021 9:30 AM GMT)

மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கி சென்னையை சேர்ந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

சென்னை,

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் கமல் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி திவ்யா (22). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 வயதில் நிதீஷ் என்ற மகன் உள்ளான்.

நேற்று திவ்யா, தான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் சகதோழிகளுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றார். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை கண்டுகளித்த அவர்கள், முடிவில் கடற்கரைக்கு சென்றனர். அங்கு திவ்யா, தனது தோழி ஜானகி உள்பட உடன் வந்த சில பெண்களுடன் கடலில் இறங்கி குளித்தார்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி திவ்யா, ஜானகி இருவரும் தத்தளித்தனர். தங்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என இருவரும் கூச்சலிட்டனர். அங்கிருந்த மீனவர்கள் சிலர் கடலில் இறங்கி நீந்திச்சென்று இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஜானகியை மட்டும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திவ்யாவை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துசென்று விட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவர்களுடன் படகில் கடலுக்கு சென்று ரப்பர் டியூப் உதவியுடன் கடலில் நீந்தி சென்று திவ்யாவை தேடினர்.

சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு திவ்யாவை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ராட்சத அலையில் சிக்கிய திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். திவ்யாவின் உடலை பார்த்து உடன் வந்த தோழிகள் கதறி அழுதனர்.

இதுபற்றி மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story