அக்காள் கண்எதிரே பரிதாபம்: லாரி சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி
தனது அக்காள் கண் எதிரேயே லாரி சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பூந்தமல்லி,
சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தை சேர்ந்தவர் வர்ஷா (வயது 22). இவருடைய தம்பி வினய் (15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் மொபட்டில் பூந்தமல்லி அருகே உள்ள இவர்களுக்கு சொந்தமான நிலத்தை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு வந்தனர். வர்ஷா மொபட்டை ஓட்ட, வினய் பின்னால் அமர்ந்து வந்தார்.
பூந்தமல்லி அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் செல்லும் போது எதிரே வந்த மொபட் மீது மோதாமல் இருக்க வர்ஷா பிரேக் பிடித்தார்.
இதில் நிலை தடுமாறிய அக்காள்-தம்பி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி, வினய் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய வினய், உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான். வர்ஷா காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தனது கண் எதிரேயே பலியான தம்பி வினய் உடலை பார்த்து வர்ஷா கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வினய் உடலை பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் மதனகோபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story