மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கொடுத்து கூட்டிச் சென்று ஐ.டி. பெண் ஊழியரிடம் தங்க சங்கிலி-செல்போன் பறிப்பு


மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கொடுத்து கூட்டிச் சென்று ஐ.டி. பெண் ஊழியரிடம் தங்க சங்கிலி-செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2022 10:10 AM GMT (Updated: 2 Jan 2022 10:10 AM GMT)

மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கொடுத்து கூட்டிச் சென்று ஐ.டி. பெண் ஊழியரிடம் தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்த திருவாரூரை சேர்ந்தவரை கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருப்பவர் சாய் சகிராபேகம் (வயது 31). ஆந்திராவை சேர்ந்த இவர், எத்திராஜ் சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வேலைமுடிந்து விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஆசாமி ‘லிப்ட்’ வேண்டுமா? என கேட்டார். சகிராபேகமும் அதனை நம்பி அவரது மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றார்.

மன்றோ சிலை மிலிட்டரி கேண்டீன் அருகே சென்றபோது அந்த ஆசாமி, மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சகிராபேகமை மிரட்டி அவர் அணிந்த 1¼ பவுன் தங்க சங்கிலி மற்றும் அவரது செல்போனை பறித்து விட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்த திருவாரூரை சேர்ந்த பிரகாஷ் (31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க சங்கிலி மற்றும் செல்போன் மீட்கப்பட்டது. அவரது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story