தாளவாடி ஒசூரில் மாதேஸ்வரசாமி கோவில் குண்டம் விழா; பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தார்கள்


தாளவாடி ஒசூரில் மாதேஸ்வரசாமி கோவில் குண்டம் விழா; பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தார்கள்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:45 PM GMT (Updated: 4 Jan 2022 9:45 PM GMT)

தாளவாடி ஒசூரில் மாதேஸ்வரசாமி கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தார்கள்.

தாளவாடி
தாளவாடி ஒசூரில் மாதேஸ்வரசாமி கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தார்கள். 
மாதேஸ்வரசாமி
தாளவாடி அருகே உள்ள ஒசூரில் பழமையான மாதேஸ்வரசாமி கோவில் உள்ளது இந்த கோவில் குண்டம் விழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் பக்தர்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தார்கள். 
பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புலியாட்டம் உள்ளிட்ட பல கலாச்சார நடனங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் அங்குள்ள காட்டாற்றில் அம்மன் அழைப்பு நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி எழுந்தருளினார் 
தீ மிதித்தார்கள்...
அதைத்தொடர்ந்து ஒசூர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சாமி உலா சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு தேங்காய் உடைத்து, பழம் வைத்து வழிபட்டனர். காலை 7 மணியளவில் சாமி உற்சவம் கோவிலை சென்றடைந்தது. 
அதற்கு முன்பே கோவிலின் முன்பு 30 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யபட்டு இருந்தது. பிறகு குண்டத்து பூஜை நடத்தி காலை 8 மணியளவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து மற்ற பூசாரிகள் தீமித்தார்கள்.
அனுமதி இல்லை
மாதேஸ்வரசாமி கோவிலில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பக்தர்கள் இறங்க அனுமதி இல்லை. 
தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம்  நடைபெற்றது. தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

Next Story