குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு


குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 11 Jan 2022 10:23 AM GMT (Updated: 11 Jan 2022 10:23 AM GMT)

குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.


வாக்காளர் பட்டியல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில், 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, புதியதாக தரம் உயர்த்தப்பட்ட குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டாா்.

குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சி ஆணையாளர்கள் ந.தாமோதரன் மற்றும் ஆர்.சுமா ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர். பின்னர், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

80 ஆயிரம் வாக்காளர்கள்

குன்றத்தூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 53 வாக்குச்சாவடிகளும், மாங்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 44 வாக்குச்சாவடிகளும், ஆக மொத்தம் 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் மொத்தம் 34 ஆண் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளும், 34 பெண் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளும், 29 அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்படி வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போது மேற்படி வாக்குச்சாவடிகளில் 39 ஆயிரத்து 606 ஆண் வாக்காளர்களும், 40 ஆயிரத்து 753 பெண் வாக்காளர்களும், 21 இதர வாக்காளர்களும், ஆக மொத்தம் 80 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறையினரிடமிருந்து பெறப்பட்டு, மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

ஏறத்தாழ 415 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story