தி.மு.க. தொண்டர் கொலை வழக்கில் 4 பேர் கைது


தி.மு.க. தொண்டர் கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2022 9:50 AM GMT (Updated: 22 Feb 2022 9:58 AM GMT)

தி.மு.க. தொண்டர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பல்லவன் சாலை காந்தி நகர் ‘ஏ’ பிளாக்கில் வசித்து வந்தவர், மதன் (வயது 36). தி.மு.க. தொண்டரான இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பல்லவன் சாலை எஸ்.எம்.நகர் 8-வது தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இவரை 7 பேர் கும்பல் வழிமறித்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென்று அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் மதன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (23) என்பவரின் தாயாருடன் மதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும், இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து மதனை தீர்த்துக்கட்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து மதன் கொலை வழக்கில் வினோத்குமார், அதே பகுதியை சேர்ந்த அவரது கூட்டாளிகளான கணபதி (24), நரேந்திரன் (21), பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த உசேன் (19) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை திருவல்லிக்கேணி போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story