ரூ.4 கோடி வாடகை பாக்கி: சென்னை மயிலாப்பூர் 'கிளப்'புக்கு 'சீல்'


ரூ.4 கோடி வாடகை பாக்கி: சென்னை மயிலாப்பூர் கிளப்புக்கு சீல்
x
தினத்தந்தி 22 Feb 2022 10:17 AM GMT (Updated: 22 Feb 2022 10:17 AM GMT)

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

இந்து சமய அறநிலைய சட்ட விதிகளின்படி கோவிலுக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மனைகளின் வாடகைதாரர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் மயிலாப்பூர் கோவிலுக்கு சொந்தமான மனை பரப்பில் செயல்பட்டு வரும் மயிலாப்பூர் கிளப் நிறுவனத்திற்கு நியாய வாடகை அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் புதிதாக நிர்ணயம் செய்த வாடகையை செலுத்தவில்லை. மேலும் கோர்ட்டில் தொடர்ந்த அவர்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மயிலாப்பூர் கிளப் நிறுவனத்தார் நியாய வாடகை நிலுவைத் தொகையில் ஒரு பகுதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை கோவிலின் தக்கார் மற்றும் இணை ஆணையர், செயல் அலுவலரிடம் வழங்கினர்.

எனினும் இந்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை வாடகை நிலுவை தொகையாக ரூ.4 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரத்து 731 இருக்கிறது. எனவே அதிக வாடகை நிலுவை வைத்துள்ளதால் மேற்படி இடத்தில் உள்ள கட்டிடம் மற்றும் அலுவலகம் ஆகியவை பூட்டி சீலிடப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story