மதுராந்தகம் நகராட்சியில் மறு தேர்தல் நடத்தக்கோரி அ.தி.மு.க. வேட்பாளர்கள் சாலை மறியல்


மதுராந்தகம் நகராட்சியில் மறு தேர்தல் நடத்தக்கோரி அ.தி.மு.க. வேட்பாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2022 9:57 AM GMT (Updated: 23 Feb 2022 9:57 AM GMT)

மதுராந்தகம் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடி என்று குற்றஞ்சாட்டி அ.தி.மு.க. வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இங்கு 24 வார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. -21 வார்டுகளிலும், கூட்டணி கட்சியினர் -3 வார்டுகளிலும், அ.தி.மு.க. -24 வார்டுகளில் போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. நகர மன்ற தலைவர் வேட்பாளராக 2-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் மோகனா சரவணன் போட்டியிட்டார்.

இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டியில் முத்திரை இல்லை என்றும் வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள அனைத்து வாக்குகளும் தி.மு.க.விற்கு விழுந்துள்ளதாகவும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் தி.மு.க.வினர் புகுந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் மாற்றியுள்ளதாக கூறி மதுராந்தகம்-சூனாம்பேடு சாலையில் மோகனா சரவணன் தலைமையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த மதுராந்தகம் மதுஐண போலீஸ் சூப்பிரண்டு பாரத், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் அ.தி.மு.க.வினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார் நீங்கள் முறையாக மனு கொடுத்து மறு தேர்தலை நடத்துமாறு அதிகாரியிடம் கூறுங்கள் என்று கூறினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story