கொடுங்கையூரில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை


கொடுங்கையூரில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 28 Feb 2022 10:19 AM GMT (Updated: 28 Feb 2022 10:19 AM GMT)

கொடுங்கையூரில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

காய்கறி வியாபாரி

சென்னை கொடுங்கையூரை அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வந்தவர் கோபி (வயது 51). இவருடைய மனைவி லதா (45). கணவன்-மனைவி இருவரும் கொடுங்கையூர் முத்தமிழ்நகர் மார்க்கெட் பகுதியில் சாலையோரத்தில் காய்கறி கடை மற்றும் பூக்கடை நடத்தி வந்தனர்.

அதே பகுதியில் சாலையோரம் பழக்கடை நடத்தி வரும் ஆனந்த் மற்றும் அவரது சகோதரர் அரவிந்த் ஆகியோருக்கும், காய்கறி வியாபாரி கோபிக்கும் இடையே கடை நடத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வெட்டிக்கொலை

இதனால் கோபி மீது கோபம் கொண்ட அண்ணன்-தம்பியான ஆனந்த், அரவிந்த் இருவரும் தங்கள் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து நேற்று மாலை காய்கறி கடையில் இருந்த கோபியை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

இதை பார்த்த லதா, தனது கணவரை காப்பாற்றுவதற்காக 5 பேரையும் தடுக்க முயன்றார். அப்போது லதாவின் வலது கையில் அரிவாளால் வெட்டிவிட்டு 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கோபி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், வலது கையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த லதாவை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான கோபியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அண்ணன்-தம்பிகளான ஆனந்த், அரவிந்த் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story