கொளத்தூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை


கொளத்தூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 15 March 2022 10:13 AM GMT (Updated: 15 March 2022 10:13 AM GMT)

கொளத்தூர் அருகே பிரபல ரவுடி ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரவுடி வெட்டிக்கொலை

சென்னை கொளத்தூர் ராஜீவ்காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி(வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது கொளத்தூர், ராஜமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் உள்ளன. ஒரு கொலை வழக்கில் சிறையில் இருந்து சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

நேற்று இரவு கொளத்தூர் மக்காராம் தோட்டம் எத்திராஜ் தெரு அருகே நடந்து சென்ற பழனியை, மர்மநபர்கள் 2 பேர் ஓட, ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். ராஜமங்கலம் போலீசார், பழனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சாலை மறியல்

விசாரணையில் பழனியின் நண்பர்களான விக்கி என்ற விக்னேஷ், ஆதி என்ற ஆதிகேசவன் ஆகியோர்தான் இவரை கொலை செய்தது தெரியவந்தது. கொலையான பழனி, ஆதிகேசவனின் நண்பர் ஒருவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தார். அந்த கள்ளத்தொடர்பை கைவிடும்படி பலமுறை எச்சரித்தும் பழனி கேட்காததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலையான பழனியின் உறவினர்கள், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ராஜமங்கலம் போலீஸ் நிலையம் எதிரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story