முன்னாள் நீதிபதியின் பாதுகாவலர் மீது நடுரோட்டில் தாக்குதல்


முன்னாள் நீதிபதியின் பாதுகாவலர் மீது நடுரோட்டில் தாக்குதல்
x
தினத்தந்தி 23 March 2022 10:11 AM GMT (Updated: 23 March 2022 10:11 AM GMT)

சென்னையில் நடுரோட்டில் முன்னாள் நீதிபதியின் பாதுகாவலரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி நடந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம், தற்போது போலீஸ் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு தனிப்பட்ட பாதுகாவலராக சக்திவேல் (வயது 52) என்பவர் உள்ளார்.

நேற்று பகல் 11 மணி அளவில் நீதிபதி செல்வம் சென்னை அசோக்நகர் போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அசோக்நகர் சிக்னல் அருகே அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். போதையில் இருந்த அவர்களை மற்ற வாகன ஓட்டிகள் ஒதுங்கி செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் ஒதுங்க மறுத்தனர்.

உடனே நீதிபதி செல்வத்தின் காரில் இருந்து பாதுகாவலர் சக்திவேல் கீழே இறங்கி ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் ஓரமாக ஒதுக்கி விட முயற்சித்தார்.

அந்த போதை ஆசாமிகள் 3 பேர் சக்திவேலிடம் தகராறு செய்தனர். அவர்களில் ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காவலர் சக்திவேலின் தலையில் வெட்டிவிட்டார். உடனே அந்த 3 போதை ஆசாமிகளும் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். நீதிபதி செல்வம் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார்.

தலையில் ரத்தம் கொட்டிய நிலையில் பாதுகாவலர் சக்திவேல், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு அரிவாள் வெட்டு காயம்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டது.

இது பற்றி தகவல் கிடைத்தவுடன் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். தப்பி ஓடிய ஆசாமிகள் யார் என்பதை அந்த பகுதியில் பொருத்தபட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்டோர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story