பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து


பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 29 March 2022 4:25 PM GMT (Updated: 29 March 2022 4:25 PM GMT)

பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து

பொங்கலூர் அருகே பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரூ.25 லட்சம் துணிகள்  எரிந்து நாசமானது. 
பனியன் வேஸ்ட் குடோன் 
 திருப்பூர் செவந்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சலாவுதீன். இவருக்கு சொந்தமான  பனியன்வேஸ்ட் குடோன்  பெருந்தொழுவு பகுதியில் உள்ள காங்கேயம்பாளையத்தில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் பணி முடிந்து குடோனை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு  12 மணி அளவில் பஞ்சு குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. 
உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடோன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.25 லட்சம் துணி எரிந்து நாசம் 
 தீ குடோன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடினர். முடிவில் முழுவதுமாக தீ அணைக்கப்பட்டது. இருந்தாலும் குடோனில் இருந்த  ரூ.25 லட்சம் மதிப்பிலான பனியன் வேஸ்ட் துணிகள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து சலாவுதீன் கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள். 

Next Story