திண்டிவனம் அருகே வயல்வெளியில் மூதாட்டி பிணம் கொலையா போலீஸ் விசாரணை


திண்டிவனம் அருகே வயல்வெளியில் மூதாட்டி பிணம்  கொலையா போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 March 2022 4:30 PM GMT (Updated: 29 March 2022 4:30 PM GMT)

திண்டிவனம் அருகே வயல்வெளியில் மூதாட்டி பிணம் கொலையா போலீஸ் விசாரணை

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு மனைவி மல்லிகா(வயது 62). இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த மல்லிகா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, மது குடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள வயல்வெளியில் மல்லிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் மல்லிகா எவ்வாறு இறந்தார்? அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  விசாரணையில் நேற்று முன்தினம் அங்குள்ள டாஸ்மாக்கடை அருகில் உள்ள வயல்வெளியில் மல்லிகாவும், ஓட்டல் தொழிலாளி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிறுநகரி கிராமத்தைச் சேர்ந்த சோமு மகன் பார்த்திபன்(37) என்பவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் மல்லிகா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பார்த்தீபனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story