தொழில் அதிபர் மகன் விபத்தில் பலி
தூத்துக்குடி அருகே நடந்த விபத்தில் தொழில் அதிபரின் மகன் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி:
நெல்லை மகராஜநகரை சேர்ந்தவர் வித்யாசேகர். இவர் பிரபல தொழில் அதிபர் ஆவார். இவருடைய மனைவி முருகலதா (வயது 57). இவர்களது மகன் ஆனந்தகனி சர்வேஷ் (37). நேற்று ஆனந்தகனி சர்வேஷ், முருகலதா ஆகியோர் ஒரு காரில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். காரை ஆனந்தகனி சர்வேஷ் ஓட்டினார்.
பொட்டலூரணி விலக்கு அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டு இருந்த ஒரு லாரியை அதன் டிரைவர் திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கார் லாரி மீது மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த ஒரு தனியார் பஸ் காரின் பின்பகுதியில் மோதியது. இதனால் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ஆனந்தகனி சர்வேஷ், முருகலதா ஆகியோர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆனந்தகனி சர்வேஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தொழில்அதிபர் மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story