விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு மீண்டும் பேட்டரி கார் வராததால் மாற்றுத்திறனாளிகள், முதியோர் அவதி


விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு மீண்டும் பேட்டரி கார் வராததால் மாற்றுத்திறனாளிகள், முதியோர் அவதி
x
தினத்தந்தி 3 April 2022 4:27 PM GMT (Updated: 3 April 2022 4:27 PM GMT)

பழுதுபார்ப்பு பணிக்காக அனுப்பப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு மீண்டும் பேட்டரி கார் வராததால் மாற்றுத்திறனாளிகள், முதியோர் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமாக விழுப்புரம் ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் விழுப்புரம் ரெயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. இதுதவிர டெல்லி, ஹவுரா, மும்பை, திருப்பதி, மங்களூரு, மேற்கு வங்காள மாநிலம் புருலியா, காரக்பூர், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் விழுப்புரம் வழியாக ரெயில் போக்குவரத்து உள்ளது. இதனால் விழுப்புரம் ரெயில் நிலையம் எந்நேரமும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக இயங்கும். இந்த ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் அதிகளவில் ரெயில் பயணம் செய்கின்றனர். இவர்கள் ரெயில் நிலையத்தின் நடைமேடைகளுக்கு படிக்கட்டு வழியாக ஏறிச்செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதியை செய்து தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் அவர்களின் சார்பாக ரெயில்வே பயணிகள் சங்கத்தினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்காக மாற்றுத்திறனாளிகளும் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினர்.

பேட்டரி கார் வசதி

இவர்களின் கோரிக்கையை ஏற்ற ரெயில்வே நிர்வாகம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக பேட்டரியால் இயங்கும் காரை வழங்கியதன்பேரில் அந்த பேட்டரி கார், விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அதன் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. விழுப்புரம் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து இங்குள்ள 6 நடைமேடைகள் வரை மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை ஏற்றிச்சென்று விடுவதற்காக பேட்டரி கார் வசதி பயன்படுத்தப்பட்டது. இப்பேட்டரி காரில் ஒரே நேரத்தில் 4 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதன் சேவை 24 மணி நேரமும் இயங்கியது. இதில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமமின்றி ஏறி தாங்கள் செல்ல வேண்டிய நடைமேடைக்கு இலவசமாகவும், எளிதாகவும் சென்று ரெயில் பயணம் மேற்கொண்டனர்.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பேட்டரி கார் பழுதுபார்ப்பு (சர்வீஸ்) பணிக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு பழுதுபார்ப்பு பணி முடிந்து மீண்டும் அந்த பேட்டரி கார், விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இதன் காரணமாக ரெயில் நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் நடைமேடைகளுக்கு படிக்கட்டு வழியாக ஏறிச்செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

பழுதுபார்ப்பு பணிக்காக அனுப்பப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த பேட்டரி கார் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வராத நிலையில் அந்த பேட்டரி காரை பழுதுநீக்கம் செய்து சென்னை ரெயில் நிலையத்திலேயே பயன்பாட்டுக்கு வைத்திருப்பதாக விழுப்புரம் பயணிகள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். எனவே விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கென ஒதுக்கப்பட்ட பேட்டரி காரை மீண்டும் கொண்டு வந்து பயன்பாட்டுக்கு விட வேண்டுமென மாற்றுத்திறனாளிகள், முதியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story